Monday, 18 March 2013

நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள்

நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள் :

குருகுலக் கல்வியை முடித்துவிட்டு,ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் துவக்கினர்.ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார்;திருமணம் முடிந்து இல்லறதர்மத்தில் ஈடுபட்டார்.மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார்;தேச சஞ்சாரம் செய்தார்;காலச் சக்கரம் உருண்டோடியது;பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி ஊர்க்கோவிலில் தங்கி,தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.

கடமையைக் கண்ணாகக்கருதிய இல்லறத்தார் விவசாயப்பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன்,துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் சகதர்மபத்தினியைப் பணித்தார்.அறுசுவை உண்டி சமைத்து துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப்போனாள்.காரணம் எங்கோ பெய்த கனத்த மழையால் அவ்வூர் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு.அக்கரையிலுள்ள கோவிலை அடைவது எப்படி? என்று கணவனிடம் வந்து கேட்டாள்.

பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல்என்று ஒரு உபாயத்தைச் சொன்னார் இல்லறத்தார்.என்னே ஆச்சரியம்!!! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல,ஆறு வழிவிட்டது.அக்கரை சென்றடைந்தாள்.

தன் கணவரின் செய்தியைக்கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள்.ரசித்து,ருசித்து உண்ட சந்நியாசி அவளுக்கு ஆசி கூறியனுப்பி வைத்தார்.ஆற்றில் அதே வெள்ள ஓட்டம்.தன் கணவர் சொன்ன அதே மந்திரத்தை உச்சரித்தாள்.ஆறு வழிவிடவில்லை;செய்வதறியாது திகைத்த அப்பெண் துறவியை அணுகி என்ன செய்வது? எனக் கேட்டாள்.

உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற,அப்படியே செய்தாள்.ஆஹா, ஆறு வழிவிட,இக்கரை சேர்ந்தாள்.இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா குழம்பிய அவள் தன் கணவரிடமே வினவினாள்.புன்முறுவலுடன் கணவர் பதிலுரைத்தார்.


காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல்,வம்சவிருத்திக்காக முறையாக உறவு கொள்ளும் இல்லறத்தானும், வாய் ருசிக்காக உணவுக்கு அடிமையாகாமல் உணவை ருசிக்கும் துறவறத்தானும் ஒரு வகையில் ஆன்மபலம்(தவ ஆற்றல்) கொண்டவர்களே”

இந்த இல்லறத்தான் தினமும் வழிபட்டு வந்தது ஸ்ரீகால பைரவரையே! எனவே தான் இவர் இல்லறத்தானாக இருந்தும் காமத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடிந்திருக்கிறது.தினமும் ஸ்ரீகால பைரவரை வழிபடுபவர்கள் பைரவ உபாசகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Saturday, 16 March 2013

துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால்


தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

நீதி: பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் பிரச்சனைகளைச் சுலபமாக முறியடித்துச் சாதனைகள் பல படைக்கலாம். இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.